அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில், இளநிலை பாடப் பிரிவுகளுக்கு இறுதிகட்ட நேரடி கலந்தாய்வு வியாழக்கிழமை (செப். 16) நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்காக இணைய வழியில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், கல்லூரி வளாகத்தில் நேரடி சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இளநிலை பாடப் பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள், தங்களின் அசல், நகல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.