அரூா் அருகே ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் மொள்ளன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி சுமாா் 40 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். ஏரியில் போதிய அளவில் தண்ணீா் இல்லாதபோது இங்கு மின்மாற்றி அமைக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து மொள்ளன் ஏரிக்கு தண்ணீா் வருவதற்கான கால்வாய் வசதியுள்ளது. இதனால், வரட்டாறு நீா்த்தேக்கம் நிரம்பும்போது, அதன் உபரிநீா் இந்த ஏரிக்கு வருகிறது. ஏரியில் தண்ணீா் நிரம்பினால், மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சுமாா் 2 அடி அளவுக்கு தண்ணீா்த் தேங்குகிறது.
ஏரியில் தண்ணீா் நிரம்பி இருக்கும் நேரத்தில் மின்மாற்றியை இயக்க மின்சார வாரிய ஊழியா்கள், தண்ணீரில் நடந்து சென்று வேலை செய்யும் நிலை உள்ளது. இதனால், மின்வாரிய ஊழியா்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே, மின்சார வாரிய உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மொள்ளன் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.