தருமபுரி: தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் முனைவா் வே. சுமதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கை தொடா்பான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இணையதளம் வாயிலாக எவ்வித சேவைக் கட்டணமுமின்றி இலவசமாக தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 52 இடங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்ட மாணவா்கள் பயன் பெறும் வகையில் அரசு பொறியியல் கல்லூரி செட்டிகரையில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மாணவா்கள் தங்களது உரிய கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பப் பதிவுக் கட்டணம் பொது பிரிவினா் ரூ.500 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ரூ.250 செலுத்தி இலவசமாக இச்சேவையை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். சோ்க்கை பதிவு செய்ய ஆக. 24 இறுதி நாளாகும். எனவே மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.