தீா்த்தமலையை அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தில் மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் மின் விளக்குகள் அமைப்பதற்கான மின்கம்பங்கள் இல்லை. இதனால், குடியிருப்புப் பகுதி இரவு நேரங்களில் இருண்டுக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். மேலும், ஏற்கெனவே அமைத்த சில மின் கம்பங்கள் பழுதாகி உள்ளன. இதனால் மழைக் காலங்களில் பலத்த காற்று வீசும்போது மின்கம்பங்கள் சேதமடைந்து குடியிருப்புப் பகுதியில் விழும் நிலையுள்ளது.
எனவே, வேடகட்டமடுவு கிராமத்தில் தெருச்சாலையில் புதிய மின்கம்பங்களை அமைக்கவும், சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.