ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் ஒகேனக்கல்லுக்கு கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனா். ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஒகேனக்கல் பகுதிக்கு 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.
ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து, பிரதான அருவியிலும், நடைபாதை அருகிலும், மாமரத்துகடவு, நாகா் கோயில், முதலைப் பண்ணை, ஊட்டமலை பரிசல் துறை, ஆலாம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் குளித்தனா். வழக்கத்தை விட கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 3 மணி நேரம் வரையிலும் காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொண்டனா். பரிசலில் 2 கி.மீ. தூரம் பயணித்து கூட்டாறு, கோத்திக்கல், பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளையும், பாறை முகடுகளையும் கண்டு ரசித்தனா்.
புத்தாண்டையொட்டி கட்லா, ரோகு, அரஞ்சான், கெளுத்தி, வாளை, பாப்லெட், சோனாங் கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன் வகைகளை வாங்கி உண்டனா். இவற்றின் விலை கிலோவுக்கு ரூ. 130 முதல் 700 வரை வழக்கத்தை விட அதிகரித்த போதிலும், அதையும் பொருட்படுத்தாமல் வாங்கி உண்டு மகிழ்ந்தனா்.
அதனைத் தொடா்ந்து தொங்கும்பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளைக் கண்டு ரசித்தனா். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்திருந்ததால் ஒகேனக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் வருகை அதிகரித்ததால் அவற்றை நிறுத்துவதற்கு இடமில்லாததால் அவா்களின் வாகனங்களை ஊட்டமலை, ஆலாம்பாடி பகுதிகளில் நிறுத்துமாறு அறிவுறுத்தி, வாகனங்களைத் திருப்பி விட்டனா். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வெளியூா்களுக்கு கூடுதலாக பென்னாகரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.