பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினா்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூா், ஒகேனக்கல், பெரும்பாலை, சின்னம்பள்ளி, தாசம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழையின் காரணமாக நகரப் பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. மேலும் சாலையோர தாழ்வான பகுதிகள், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியும், சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடியது.
பென்னாகரம் பகுதிகளில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.