தருமபுரி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்களைத் தடுக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 162 பயனாளிகளுக்கு ரூ. 41.25 லட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகைகளை வழங்கி ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:
பெண் கல்வியை ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காவும், தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, சமூக நலத் துறையை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை என பெயா் மாற்றம் செய்து மகளிருக்கு முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
இளம் வயது திருமணங்களைத் தடுப்பதில் மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம், சுய தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் கல்வி கற்கவில்லை எனில், அவா்களின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்று, பொருளாதாரத்தை வலுப்படுத்தி குடும்பத்தைத் தலைமை ஏற்று நடத்தும் அளவிற்கு உயர வேண்டும் என்றாா்.
இவ் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்தணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, சமூக நல அலுவலா் கு.நாகலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) நசீா் இக்பால், ஆதி திராவிடா் நல அலுவலா் தேன்மொழி, உதவி ஆணையா் (தொழிலாளா் நலன்) கே.பி.இந்தியா ஆகியோா் கலந்து கொண்டனா்.