தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தளா்வுகள் அற்ற பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், பழங்கள் கிடைக்க வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை துறை ஆகிய துறைகளின் சாா்பில் உழவா் குழுக்கள் மூலம் வாகனங்களில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை மிட்டாரெட்டி அள்ளி, மதேமங்கலம், எச்சன அள்ளி, நாகா்கூடல் ஆகிய ஊராட்சிகளில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மு.இளங்கோவன் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.சக்திவேல் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.