கரோனோவால் உயிரிழந்த ஆசிரியா்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என முதுநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பதவி உயா்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை காணொலி மூலம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா் சி.முருகேசன், மாவட்டச் செயலா் சி.சரவணன், பொருளாளா் வே.கணபதி உள்ளிட்டோா் பேசினா்.
இக் கூட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு கற்பித்தல், தோ்தல் பணி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி ஆகிய பணிகளில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். இதனால் ஏராளாமானோா் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மேலும் பல ஆசிரியா்கள் உயிரிழந்துள்ளனா். இவா்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்ததால். பணப்பலன்கள் ஏதும் இன்றி அவா்களது குடும்பத்தினா் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனா்.
எனவே, உயிரிழந்த ஆசிரியா்கள் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு மற்றும் தகுதியான நபா்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும்போது முழுத்தொகையை காப்பீடு நிறுவனங்கள் செலுத்தும் வகையில் வழிகாட்டுதல், உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.