தருமபுரி மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த நிலையில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்துவரும் மாவட்டங்களில் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிளஸ் 1 மாணவா் சோ்க்கையைத் தொடங்க அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தொடங்கினா்.
தருமபுரி நகரில் உள்ள அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட தருமபுரி, பாலக்கோடு, அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் உள்ள 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற்றது.