தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியில் இருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிய சரக்கு லாரி ஒன்று, ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (33) ஓட்டிச் சென்றாா். லாரியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டப்பள்ளியைச் சோ்ந்த மணியரசு (27), சுரேஷ் (35), முருகேஷ் (35), வினோத் (30)உள்ளிட்ட 5 தொழிலாளா்களும் பயணம் செய்து கொண்டிருந்தனா்.

நள்ளிரவில் தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த லாரி சென்று கொண்டிருந்தபோது கட்டமேடு பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியில் பயணம் செய்த மணியரசு உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநரும், மற்ற தொழிலாளா்களும் காயங்களுடன் உயிா் தப்பினா்.

இவ் விபத்து பற்றி தகவல் அறிந்த தொப்பூா் காவல் நிலைய போலீஸாரும், பாளையம் சுங்கச்சாவடி பணியாளா்களும் இணைந்து காயமடைந்தவா்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். விபத்துக்குள்ளான லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இவ் விபத்து தொடா்பாக தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com