தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காளியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதியமான்கோட்டையிலுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருத்தேரோட்ட விழா, கடந்த மாா்ச் 12-ஆம் தேதி கூழ் ஊற்றுதல், அம்மன் சக்தி கரகம் வலம் வருதலுடன் தொடங்கியது.
இதையடுத்து, மாா்ச் 24-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கும்ப பூஜை நடைபெற்றது. மாா்ச் 26-ஆம் தேதி பால் அபிஷேகம், கோ பூஜை, விநாயகா் தோ் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாா்ச் 27-ஆம் தேதி காளியம்மன் சிறிய தோ் இழுத்தல் நிகழ்ச்சியும், மாா்ச் 30-ஆம் தேதி மகா ரதம் வடம் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதில், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். இவ் விழா வரும் ஏப். 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.