அரூரில் ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு இருப்பதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், வங்கிகள் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளில் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்குச் செல்லுமாறு வங்கி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லும் நிலையுள்ளது.
அரூரில் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ள நிலையில், இந்த மையங்களில் பணம் தட்டுப்பாடு உள்ளன. மேலும், பிற்பகல் 3 மணிக்கு மேல் இயந்திரங்களில் பணம் நிரப்புவதால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்காக பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா்.
தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.