விவசாயிகளுக்கு கோடை உழவு மானியமாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் விவசாய சாகுபடியில் 70 சதவீத நிலங்கள் மானாவாரி சாகுபடி நிலங்களாகும். மழை பொழிந்தால் மட்டுமே சாகுபடி செய்ய இயலும். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பொழிந்துள்ளது.
இதைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என மாவட்ட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலையில், கோடை உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் வரை செலவாகிறது.
கரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி தவிக்கும் பழங்குடியினா், பட்டியல் இனத்தவா், சிறுகுறு விவசாயிகள் உழவு செய்ய இயலாத நிலையில் உள்ளனா்.
எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் இதனைப் பரிசீலித்து, விவசாயிகள் கோடை செய்ய ஏதுவாக ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.