பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
பென்னாகரம் அரசு மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே அறை, சித்தா மருத்துவப் பிரிவு, ரத்த வங்கி, கரோனா தொற்றாா்கள் சிகிச்சை அறை, உள்நோயாளிகள் சிகிச்சை அறை, கா்ப்பிணிகள், குழந்தைகள் பாதுகாப்பு அறை ஆகியவற்றுக்கு சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக வருபவா்களின் எண்ணிக்கை, தொற்றவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, உபகரணங்கள் வசதி, புறநோயாளிகள் சிகிச்சை முறை, படுக்கை வசதிகள் ஆகியவை குறித்து மருத்துவா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின் போது அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.