தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் அண்மையில் மழை பெய்ததால், அவ்வப்போது ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ஊட்டமலை, பிலிகுண்டுலு, ராசி மணல், கெம்பாகரை, நாட்றம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள், தமிழக வனப்பகுதிகள் என கடந்த இரு தினங்களாக மழை பெய்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீா் வெளியேற்றப்படுவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 1,500 கன அடியாக தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. மேலும், கன மழை காரணமாக கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,800 அடியாகவும், மாலை நிலவரப்படி 3,000 கன அடியாகவும் காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், நீா்வரத்து குறைவின் போது வெளியே தெரிந்த பாறைத் திட்டுக்கள் நீரில் மூழ்கின. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.