காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ராசிமணல், நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி, கெம்பாக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா, வனப் பகுதிகளின் ஓடைகளிலிருந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி நொடிக்கு 11,000 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.