விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனா்.
வார விடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள மாமரத்து மடுவு பரிசல் துறையில் நுழைவு கட்டணம் செலுத்தி, கூட்ட நெரிசலால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, முறையான பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து பரிசலில் சென்ற சுற்றுலாப் பயணிகள் சினி அருவி, வாட்ச் டவா், ஐவா் பாணி மற்றும் சிற்றருவிகளின் அழகைக் கண்டு ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, வாளை, அஞ்சான், கெளுத்தி உள்ளிட்ட மீன் வகைகளின் விலை கிலோ ரூ. 150 முதல் 500 வரையிலும் விலை அதிகரித்தது. விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கி, சமைத்து உணவருந்தி மகிழ்ந்தனா்.
பின்னா் முதலைப் பண்ணை, வண்ண மீன் காட்சியகம், சிறுவா் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லிருந்து பல்வேறு பகுதிக்கு செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.