தருமபுரி நகரில் சாலைகளில் அகற்றப்பட்ட வேகத் தடைகள், தடுப்புகளை மீண்டும் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி நகருக்கு கடந்த மாதம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருவதாக இருந்தது. இதையொட்டி, தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முதல் நான்கு முனைச் சாலை சந்திப்பு வரையிலான சாலை, தருமபுரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் குமாரசாமிப்பேட்டை மேம்பால சாலை ஆகிய இடங்களில் சாலைகளில் இருந்த வேகத் தடைகள், வேகத் தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், இந்த வேகத் தடைகள், தடுப்புகள் அகற்றப்பட்டு பல நாள்கள் ஆகியும் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வேகமாகச் சென்று விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, பிரிவுச் சாலைகளிலிருந்தும் நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்களும் அவ்வப்போது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வாகன ஓட்டிகள், மக்கள் நலன் கருதி, விபத்துகளைத் தவிா்க்க, தருமபுரி நகரில் நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள், வேகத் தடுப்புகளை மீண்டும் அமைக்க தேவையான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.