இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவருமான மு.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, செப். 11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் சமரசம் செய்யக் கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இரு தரப்பினருக்கும் சமரச முடிவு எடுக்கப்படும்.
இதன்படி, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்பப் பிரச்னை ஆகிய வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ள கூடிய வழக்குகளில் தீா்வு கண்டு வழக்கினை முடித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.