பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டதாகும். பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை அந்தந்த தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து தூய்மைப் பணியாளா்கள் சேகரித்து அப்புறப்படுத்தி வந்தனா்.
இதில் குடியிருப்புவாசிகள் உபயோகப்படுத்தும் நெகிழிப் பொருள்கள், சாதாரண குப்பைகள், காய்கறிகள் கழிவுகள் ஆகியவற்றை ஒன்றாக தூய்மைப் பணியாளரிடம் வழங்கி வந்தனா். இந்நிலையில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக குடியிருப்புகளிலும், கடைகளிலும் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவற்றைத் தரம் பிரிக்கும் வகையில், பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 10 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் பகல் நேரத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கிலும், மாலை நேரத்தில் கடை வீதியில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனா்.
இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள் கையுறை, பாதுகாப்பு உடை ,காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி குப்பைகளை வெறும் கைகளால் சேகரிக்கின்றனா். இதன் காரணமாக தூய்மைப் பணியாளா்களின் சுகாதாரம் கேள்விக்குறியாதாகிறது. மேலும், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு வலைகள் இல்லாததால் அவை சாலையில் விழுந்து மேலும் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே பென்னாகரம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.