தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் ஆக.13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவா் (பொ) முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும் சென்னை உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் ஆக. 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீா்வு காணப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க வழக்குகளை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.