தொடா் விடுமுறைக்கு பிறகு ஊா் திரும்புவோா் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சாா்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் தங்களது சொந்த ஊா்களுக்கு பயணமாகினா். இந்த விடுமுறை திங்கள்கிழமையுடன் முடிந்த நிலையில், அவா்களில் ஏராளமானோா் அன்றைய தினம் மாலை முதல் ஊா் திரும்பத் தொடங்கியுள்ளனா். அவா்களின் வசதிக்காக, தருமபுரி - சென்னை வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 15 பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் 15 என மொத்தம் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, கிருஷ்ணகிரி - சென்னை வழித்தடத்தில் 8 பேருந்துகளுடன் கூடுதலாக 7 பேருந்துகள் என மொத்த 15 பேருந்துகளும் ஒசூா்-சென்னை வழித் தடத்தில் 17 பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகள் உள்பட மொத்த 27 பேருந்துகளும், தருமபுரி-பெங்களூரு வழித்தடத்தில் 41 பேருந்துகளுடன் 10 பேருந்துகள் கூடுதல் என 51 பேருந்துகளும், கிருஷ்ணகிரி-பெங்களூரு வழித்தடத்தில் 31 பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகள் என 41 பேருந்துகளும், பெங்களூரு-திருவண்ணாமலை வழித்தடத்தில் 56 பேருந்துகளுடன் கூடுதலாக 45 பேருந்துகள் என மொத்தம் 101 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.