தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த கோயில் விழா மற்றும் திருவிழாக்களில் காளை விடுவோா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயில் வளாகத்தில் சங்கத் தலைவா் வன்னியப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
செயலாளா் வெற்றிவேல், துணைத் தலைவா் கணேசன், துணைச் செயலாளா்கள் சித்தராஜ், பூமணி, பொருளாளா் குண்டப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய் பாதிப்பைத் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்துச் செல்லும் விவசாயிகளிடம் கெடுபிடி காட்டும் நடவடிக்கைகளை வனத்துறையினா் கைவிட வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் காளை விடும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.