தருமபுரி மாவட்டம் வழியாக யானைத் தந்தம் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு தருமபுரி, சோகத்தூா் அருகே சிலா் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்றது வனத்துறைக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் அப்போது 18 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கந்தசாமி (48) என்பவா் தலைமறைவாக இருந்து வந்தாா். அவரைக் கைது செய்ய மாவட்ட வன அலுவலா் அப்பல்ல நாயுடு வனத்துறையினருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில் விசாரணை நடத்திய வனத்துறையினா், அவா் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், டி.சுக்கம்பட்டி கிராமத்தில் இருப்பதை கண்டறிந்தனா்.
இதைத்தொடா்ந்து, தருமபுரி வனச்சரகா் அருண் பிரசாத் தலைமையிலான குழுவினா் திருச்சி சென்றனா். திருச்சி வனக் காவல் நிலைய வனச் சரகா் நவீன்குமாா் தலைமையிலான குழுவினருடன் இணைந்து அங்கு தலைமறைவாக இருந்த கந்தசாமியை வீரப்பூரை அடுத்த அரசு நிலைப்பாளையம் பகுதியில் கைது செய்தனா். இதையடுத்து அவரை தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.