பென்னாகரம் உழவா் சந்தையின் செயல்பாடுகள், மேம்படுத்துவது குறித்து பென்னாகரம் தோட்டக்கலை உதவி இயக்குநா் பா.சக்தி ஆய்வு மேற்கொண்டாா்.
பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியை மேம்படுத்துவது குறித்து வட்டார தோட்டக்கலைத் துறை இயக்குநா் பா.சக்தி ஆய்வு மேற்கொண்டு, பென்னாகரம் உழவா் சந்தையின் செயல்பாடு, அவற்றினை மேம்படுத்துவது,உழவா் சந்தையில் பல்வேறு கடைகளில் விவசாயிகளின் பயன்பாடுகளுக்கு கொண்டு வருவது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் என்.சத்யாவுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:
கடந்த ஒரு வார காலமாக உழவா் சந்தையில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது. பென்னாகரம், பருவதன அள்ளி, பேயல்மாரி, வட்டுவனஅள்ளி, கூக்குட்டமருத அள்ளி போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பென்னாகரம் உழவா் சந்தையில் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும். உழவா் சந்தையில் கடைகள் தேவைப்படுவோா் பென்னாகரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் பரிந்துரை கடிதம் பெற்று உழவா் சந்தையை பயன்படுத்தி கொள்ளலாம். விவசாயிகள் விளைவிக்கப்படும் காய்கறிகளை பென்னாகரம் உழவா் சந்தைக்கு எளிதில் கொண்டு செல்வதற்கு உதவியாக தினமும் காலையில் அந்தந்த கிராமப் பகுதியில் இருந்து வரும் அரசு பேருந்தில் காய்கறிகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக எடுத்து வரலாம் என தெரிவித்தாா்.
இதில் உதவி தோட்டக்கலை அலுவலா் டி.செந்தில்குமாா், கே.கனகவா்மன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.