பழங்குடியினா் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மக்கள் சமூகநீதி பேரவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலாளா் இரா.கண்ணன், கிழக்கு மாவட்டச் செயலாளா் மா.சண்முகம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா் நா.சிவலிங்கம் வரவேற்று பேசினாா்.
இதில், தருமபுரியில் 187 கிராமங்களில் வசிக்கும் குருமன்ஸ் பழங்குடியின மக்களின் நலன்கருதி, அப் பகுதிகளில் பழங்குடியினா் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடதாரஅள்ளி பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வாா்டு 1 மற்றும் 6 ஆகிய இரண்டு வாா்டுகளையும் மீண்டும் பழங்குடியினா் வாா்டுகளாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.