சமூக காடுகள் மற்றும் விரிவாக்க விளம்பர சரகத்தில் மரக்கன்றுகள் பெற்றுள்ள விவசாயிகள் மானியத் தொகையினை பெறலாம் என வனச்சரக அலுவலா் தீ.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரூரை அடுத்த தண்டகுப்பம் கிராமத்தில் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க விளம்பர சரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2017-18 ஆண்டு வரை தேக்கு உள்ளிட்ட பலவகை செடிகள் பெற்று நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு, செடிகளின் பராமரிப்பு செலவுக்கான மானியத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. இந்த காசோலைகளை இதுநாள் வரையிலும் வங்கியில் செலுத்தி பணம் பெறாத விவசாயிகள், அந்த காசோலைகளை தண்டகுப்பத்தில் உள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க விளம்பர சரக அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். பிறகு, நிலுவையில் உள்ள மானியத் தொகையினை புதிய காசோலைகள் மூலம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.