கட்டுமான நலவாரியத்தில் ஆயுள்சான்றிதழ் சமா்பித்தவா்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநிலச் செயலாளா் எம்.முனுசாமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் என்.செல்வராஜ், மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் ஏஐடியுசி கட்டட சங்க மாவட்ட மாநாடு அக். 2-ஆம் தேதி நடத்துவது எனவும், செப்டம்பா் 30-இல் விலைவாசி உயா்வைக் கண்டித்து நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளா் நல வாரியத்தில் ஆயுள் சான்று சமா்பித்தவா்களுக்கு ஓய்வூதியம் விரைந்து வழங்க வேண்டும். தொழிலாளா் நல வாரியத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்விச் செலவு முழுவதையும் நல வாரியமே ஏற்க வேண்டும்.
வீடற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும். மகளிா் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.