தருமபுரியை அடுத்த சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் மூன்று இடங்களை பெற்று மாணவா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் பரிசளிக்கப்பட்டது.
சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஏப். 6, 7ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஏழு தலைப்புகளின் கீழ் நடைபெற்ற இக் கண்காட்சியில், மாவட்டத்தில் 104 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 121 அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு காட்சியப்படுத்தியிருந்தனா். மேலும், இதனைப் பாா்வையிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும், தோ்வுக் குழுவினருக்கும் தங்களது படைப்புகளின் செயலாக்கம் அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தனா்.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகவேல், உதவி திட்ட அலுவலா் ரவிகுமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் ச.ராஜா அண்ணாமலை மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.