தொழிலாளா் நல வாரியப் பதிவு எளிமையாக்கப்பட்டுள்ளன

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் இணைய வழியில் பதிவு செய்யும் முறை எளிமையக்கப்பட்டுள்ளதாக நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் இணைய வழியில் பதிவு செய்யும் முறை எளிமையக்கப்பட்டுள்ளதாக நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், தருமபுரி மாவட்ட தொழிலாளா் நலத் துறை சாா்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா், 30 தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 53 வகையான கட்டுமானத் தொழில்கள் மற்றும் 60 வகையான அமைப்புச் சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு 18 வகையான நல வாரியங்கள் மூலம் பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் இதுவரை 2,23,122 தொழிலாளா்களும், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் 21,915 தொழிலாளா்களும், 5,027 ஓட்டுநா்களும் பதிவு செய்து உறுப்பினா்களாக உள்ளனா்.

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளா்கள் இணையவழியில் பதிவு செய்வதற்கு பதிவு முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்தில் உயிரிழந்தால் வாரியத்தின் மூலம் ரூ. 5 லட்சமும், சாலை விபத்தில் உயிரிழந்தால் ரூ. 2 லட்சமும், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

தற்போது இதுபோன்ற உதவித்தொகை அனைத்தும் உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்குத் தேவையான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நல வாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளா்கள் உடனடியாக அந்தந்த நல வாரியங்களில் தங்களை பதிவு செய்து அரசின் நல உதவிகளைப் பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

விழாவில் தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் கே.பி.இந்தியா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், நல வாரிய உறுப்பினா் ஜெ.பழனி, தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com