மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று எம்.பி. எஸ்.முனிசாமி தெரிவித்தாா்.
இது குறித்து கோலாரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கோலாா் தங்கவயலில் உள்ள மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் தொடங்கப்படும். அதற்குத் தேவையான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். மாரிகுப்பத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்படும். கரோனா காரணமாக ஒரு சில ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்கமுடியாமல் இருந்தது.
ரயில்களின் சேவையைத் தொடங்குவது தொடா்பாக தென்மேற்கு ரயில்வே பொது மேலாளரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். காலை 4.30 மணிக்கு மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூருக்கு ரயிலை இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோலாா்தங்கவயலில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைப்பது தொடா்பாக 10 நாட்கள் காத்திருப்போம். அதற்குள் அலுவலகம் அமைக்காவிட்டால், மாவட்ட பொறுப்பு அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை அழைத்துக்கொண்டு முதல்வரை சந்தித்து முறையிடுவோம் என்றாா்.