தருமபுரி நகராட்சிப் பகுதியில் உள்ள 33 வாா்டுகளிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தொடங்கி வைத்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ஜெயசீலன், சுகாதார அலுவலா் சுசீந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.
தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளில் கொசு புழு ஒழிப்புப் பணிக்கு, வாகனத்தில் வைத்து இயக்கும் வகையிலான கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் இயந்திரம், 16 சிறிய வகை மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் நகராட்சி சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 15 நாள்களுக்கு ஒருமுறை கொசு ஒழிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் தருமபுரி நகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பு இல்லாத இடங்களில் குடிநீா் வழங்குவதற்கு வசதியாக 6,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் லாரி 15-ஆவது மத்திய நிதி மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.