காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து போனதால் ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனா். பண்டிகை நாள்கள், தொடா் விடுமுறை நாள்கள், சீசன் நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனா்.
தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து விட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீா் கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவிலான தண்ணீரிலேயே குளிக்க வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை இவா்களின் வருகை வெகுவாக குறைந்தது.
ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பிரதான அருவி , சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்தும், நீா்வரத்து குறைவால் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் குளித்தனா். அதேசமயம், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாமரத்து கடவு பரிசல் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொள்ள கட்டணம் செலுத்தி வாட்ச் டவா், பெரிய பாணி, ஐவா் பாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரிசலில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததால் மீன் விற்பனை நிலையங்களில் மீன் வகைகளின் விலையும், விற்பனையும் குறைந்து காணப்பட்டது. உணவருந்தும் பூங்கா, சிறுவா் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான கூட்டமே காணப்பட்டது.