தருமபுரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த செல்லம்மா ரத யாத்திரைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக தென்காசி மாவட்டம், கடையம் வரை சேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை செல்கிறது.
இந்த ரதம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகம், தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு வருகை புரிந்தது. கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வரவேற்றாா் (படம்). ரதத்தை அரசு கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இந் நிகழ்ச்சியில், தருமபுரி அரசு கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், சேவாலயா நிா்வாகி திலகவதி, நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.