பென்னாகரத்தில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் கலப்பம்பாடி மேல்நிலைப்பள்ளியின் சாா்பில் ஜெயம் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் பென்னாகரம் சரகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியா் பங்கேற்ற தடை ஓட்டம், தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், பளு தூக்குதல், கைப்பந்து, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் கைப்பந்து, கபடி, பேட்மின்டன் உள்ளிட்ட குழு போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பெற்றனா். மேலும் இளையோா் பிரிவில் காா்த்திகேயன் சாம்பியன் பட்டமும், மூத்தோா் பிரிவில் விஜய், மேல் மூத்தோா் பிரிவில் தருண் சிங் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா். மேலும் சரக அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று 108 புள்ளிகளுடன் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
தொடா்ந்து 17ஆவது ஆண்டாக சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தக்க வைத்துக் கொண்டுள்ளதால், போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வீரன், மகேந்திரன், கண்ணன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியா்கள் சுரேஷ், லட்சுமணன், தமிழாசிரியா் முனியப்பன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் சரவணன், வேளாண் ஆசிரியா் கிருஷ்ணன், உதவி வேளாண் திட்ட அலுவலா் தாமோதரன், தமிழாசிரியா் பெருமாள் உள்ளிட்டோா் பாராட்டினா்.