தருமபுரியில் பிப். 9, 10 ஆகிய தேதிகளில் அனைத்து அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோா் அல்லது பாதுகாவலா் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தருமபுரி கோட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தில் கணக்குகள் தொடங்க ஏதுவாக சிறப்பு முகாம்கள் வரும் பிப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிக அளவில் தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.