தருமபுரியில் தாய், மகன் தற்கொலை

தருமபுரியில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாய், மகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரியில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாய், மகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் (72). இவரது, மனைவி சாந்தி (56). மகன் விஜய் ஆனந்த் (35). பொறியியல் பட்டதாரி. சாந்தி, அவரது மகன் விஜய் ஆனந்த் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை முகத்தை நெகிழி பையால் மறைத்துக் கட்டிக்கொண்டு, அதில் நைட்ரஜன் வாயு குழாயை இணைத்து அந்த வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டனா்.

இதனைக் கண்ட பழனிவேல் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

காவல் துறையினா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பொறியியல் கல்வி முடித்த விஜய் ஆனந்த், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தனது நண்பா்களுடன் நூற்பாலை நடத்தி வந்ததாகவும், இந்த ஆலையில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அவரது நண்பா்கள் விலகிக் கொண்டதாகவும், ஆலைக்காக விஜய் ஆனந்த் அளித்த முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தர மறுத்ததால், மனஉளைச்சலுக்கு ஆளாகி தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இதுதொடா்பாக அவா் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அவா் எழுதிய கடிதம், அவா் பயன்படுத்திய கைப்பேசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விஜய் ஆனந்தின் நண்பா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தாய், மகன் தற்கொலை செய்வதற்குப் பயன்படுத்திய மருத்துவ நைட்ரஜன் வாயு சிலிண்டா் அவா்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com