காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய நாமக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (22), ஒசூா், சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். தனது நண்பா்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வந்த இவா், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஆலம்பாடி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாா்.
இதனைக் கண்ட அவரது நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிருஷ்ணமூா்த்தி கிடைக்காததால், ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் சுமாா் ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு கிருஷ்ணமூா்த்தியை சடலமாக மீட்டனா். உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.