பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை
பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்த நிலையில், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வந்தனா். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
சனிக்கிழமை மாலை பென்னாகரம், தாசம்பட்டி, ஏரியூா், ஒகேனக்கல், முதுகம்பட்டி பெரும்பாலை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கி, இடியுடன் கூடிய கனமழையாக மாறியது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள், வடு காணப்பட்ட வயல்வெளிகள், குளங்களில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.
சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் பென்னாகரம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. வெப்பநிலை, அனல் காற்று உள்ளிட்டவற்றால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்த பொதுமக்கள், விவசாயிகள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனா்.
பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.