கிருஷ்ணகிரியில் நாளை விஜய் வித்யாலயா கல்விக் குழுமம் சார்பில் மாரத்தான் ஓட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:17 AM | Last Updated : 04th January 2019 08:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (ஜன. 5) ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக் குழுமம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக் குழுமத்தின் தலைவர் டி.என்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக் குழுமத்தின் சார்பில் 3 கி.மீ. தூரம் வரையிலான மாரத்தான் ஓட்டம் ஜன. 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு விஜய் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த ஓட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். இந்த ஓட்டமானது அரசு மகளிர் கலைக் கல்லூரி சாலை, ராயக்கோட்டை சாலை வழியாகச் சென்று பள்ளி வளாகத்தில் நிறைவு பெறுகிறது.
இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் அவசியம், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வகையில் சில எளிய அன்றாட உடல்பயிற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆசிய புத்தகப் பதிவேட்டில் இடம் பெற்ற டிரம்மர் குமரன், தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கௌதம் மற்றும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான முன்பதிவானது ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
தொடர்ந்து, மாரத்தான் ஓட்டத்துக்கான இலச்சினையை கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வெளியிட்டார். அப்போது, கைப்பந்து பயிற்சியாளர் அற்புத ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.