மலைச்சந்து கிராமத்தில் தென்னையில் சர்க்கரை தயாரிப்பு பயிற்சி
By DIN | Published On : 29th September 2019 04:06 AM | Last Updated : 29th September 2019 04:06 AM | அ+அ அ- |

மலைச்சந்து கிராமத்தில் தென்னையிலிருந்து சர்க்கரை தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் 2019-20 கீழ், மலைச்சந்து, கிராமப் பகுதியில் விவசாயிகளுக்கு தென்னையில் சர்க்கரை தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை, வேளாண்மை அலுவலர் பிரியா, தொடங்கி வைத்து, தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், தென்னையில் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பு, அதன் சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பூமதி, தென்னையிலிருந்து சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், அதன் சத்துகள், பயன்பாடுகள், மதிப்புக் கூட்டு பொருள்கள், சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் கண்ணன், தென்னை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். தென்னை மரத்துக்குத் தேவைப்படும் நுண்ணூட்டங்கள், ஊக்க மருந்தின் பயன்பாடு, பயன் படுத்தும் முறைகள் குறித்து வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் நந்தினி, வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு உதவி மேலாண்மை அலுவலர் புஷ்பாகரன் உள்ளிட்டோர் விளக்கினர். இந்த நிகழ்ச்சியை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் ஒருங்கிணைத்தார்.