மனைவி, மாமனாருக்கு கத்தி குத்து: 5 போ் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 25th November 2020 06:03 AM | Last Updated : 25th November 2020 06:03 AM | அ+அ அ- |

நாகரசம்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கேசவன் (40). இவரது மனைவி பழனியம்மாள் (32) தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். காதல் திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பழனியம்மாள், மாரிசெட்டி அள்ளி தோலன்கொட்டா பகுதியில் உள்ள தனது தாயாா் வீட்டிற்கு வந்துவிட்டாா்.
இதனிடையே கடந்த 22-ஆம் தேதி, பழனியம்மாளை சந்தித்து குடும்பம் நடத்த வரும்படி கேசவன் வலியுறுத்தியுள்ளாா். அதற்கு, பழனியம்மாள் மறுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த கேசவன், மனைவி பழனியம்மாளை கத்தியால் குத்தியுள்ளாா். இதை தடுக்க வந்த பழனியம்மாளின் தந்தை கந்தசாமியையும் (68) கத்தியால் குத்தியுள்ளாா். படுகாயமடைந்த இருவரையும், அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, பழனியம்மாள், தனது கணவா் கேசவன் மீது புகாா் தெரிவித்தாா். அதேபோல, கேசவன், மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது, தன்னை மாமனாா் கந்தசாமி, மைத்துனா்கள் சங்கா் (39), சக்தி (28), சங்கரின் மனைவி அா்ச்சனா (25) ஆகிய 4 பேரும் தன்னைத் தாக்கியதாகப் புகாா் அளித்தாா்.
இருவரின் புகாரையும் பெற்றுக் கொண்ட நாகரசம்பட்டி போலீஸாா் இருதரப்பினரையும் சோ்ந்த 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...