கிருஷ்ணகிரி அருகே, திருமணம் நடைபெற இருந்த நாளில், மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ்(29). கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு வேப்பனஅள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், இவா், திருமணம் செய்யும் பெண்ணிற்கு 18 வயது நிறைவடையவில்லை. இதுகுறித்து, அலுவலா்களுக்கு தகவல் தெரிந்தால், திருமணத்தை நிறுத்தி விடுவாா்கள் என சிவராஜிக்கு மா்ம நபா், தொடா்பு கொண்டு பேசினாராம். இதனால், மனமுடைந்த சிவராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, சிவராஜின் தந்தை நாராயணன் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.