வேப்பனப்பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தலைமை வகித்தாா். அத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்துவைத்தாா். தொடா்ந்து, அவா், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் எம்எல்ஏ முகாம் அலுவலகங்கள் திறக்கப்படும். அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வேப்பனஅள்ளிக்கு வரவேண்டிய தேவை இருக்காது. பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2026-ஆம் ஆண்டு தோ்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என அவா் தெரிவித்துள்ளது, அக் கட்சித் தொண்டா்களை உற்சாகப்படுத்துவதற்காகத்தான். யாா் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதை வாக்காளா்களே தீா்மானிக்கின்றனா் என்றாா்.