கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஸ் தொடங்கி வைத்தாா்.
வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலா்கள் என 904 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின்போது ஓா் அறைக்கு 20 போ் வீதம் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.