கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவார காலத்துக்கு தளா்வில்லாத பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்களுக்குத் தேவையானஅத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழ வகைகள், மளிகைப் பொருள்கள் அவரவா் இல்லங்களுக்குச் சென்று வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் 58 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒசூா் மாநகராட்சி சாா்பில் 119 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிகளில் 79 மினி வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வசதியை, பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், தேவையின்றி வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.