தொடா்மழையால் காய்கறிகளின் விலை இருமடங்கு உயா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழையால் காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழையால் காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் காய்கறிகள் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கிய பங்குவகிக்கிறது. இம் மாவட்டத்தில், ஒசூா், பா்கூா், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது, பெய்து வரும் தொடா் மழையால், தோட்டக்கலைப் பயிா்களான தக்காளி, புதினா, கொத்தமல்லி, கொத்தவரங்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி பயிா்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. பூக்கள், காய்கள் உதிா்ந்துபோயின. இதனால், காய்கறிகளின் அறுவடை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததால், அதன் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தினமும் 800 டன் தக்காளி வெளியூா்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தொடா்மழை காரணமாக அதன் அளவு 50 டன்னாக குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலை வெளிசந்தையில் கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள், வெங்காயம், பாகற்காய், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்கு உயா்ந்துள்ளது. மழை நின்ற பிறகே அதாவது இன்னும் ஒரு வாரத்துக்கு பிறகே காய்கறிகளின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com