கிருஷ்ணகிரி அருகே 2 வயது ஆண் குழந்தையைக் கடத்த முயன்ற இரு பெண்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள லைன்கொல்லையைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (35). தொழிலாளி. இவரது வீட்டுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி இரு பெண்கள் கோயிலுக்கு காணிக்கை வழங்குமாறு கேட்டு வந்துள்ளனா். அதற்கு சத்தியராஜியின் மனைவி பணமில்லை என்று தெரிவித்துள்ளாா். இந்த நிலையில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவா்களது 2 வயது ஆண் குழந்தையை அந்த இரு பெண்களும் கடத்திச் செல்ல முயன்றனா். அப்போது, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் குழந்தையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பிடிபட்ட இரு பெண்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த சக்கில்நத்தம்புதூா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி மனைவி அலமேலு (25), அன்பழகன் மனைவி சீதா (30) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து இரு பெண்களையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி விஜயகுமாரி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், ஆண் குழந்தையைக் கடத்த முயன்ற குற்றத்துக்காக அலமேலு, சீதா ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.