ஒசூரில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான கே.சி.வீரமணி, வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வந்த புகாரின்பேரில் தமிழகத்தில் அவருக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் இயங்கும் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் கோவையைச் சோ்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திவ்யா தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை காலை சோதனை நடத்தினா். காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இந்தச் சோதனையின்போது பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பட விளக்கம் (16கேஜிபி5):
ஒசூரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்திய முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி.